பொதுவாக தனியார் கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்கும் மக்கள் குறிப்பிட்ட சில விஷயங்களை விசாரிப்பதுடன் அமைதியாகி விடுகின்றனர். வீட்டின் பரப்பளவு என்ன, நிலத்தின் பிரிபடாத பங்கான யு.டி.எஸ்., எவ்வளவு கிடைக்கும் என்று தான் பலரும் பார்க்கின்றனர்.
இத்துடன் ஒரு சதுர அடிக்கான விலை என்ன, அதில் எவ்வளவு குறைக்க முடியும் என்பது போன்ற விஷயங்களில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர். இது மட்டுமல்லாது, அத்திட்டத்தில் முறையாக கட்டட அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது தொடர்பான விபரங்களையும் மக்கள் துவக்கி உள்ளனர்.
பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள், அவர்களின் திட்டத்தில் ஏதாவது ஒரு வீட்டை நீங்கள் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்யும் நிலையில் குறிப்பிட்ட தொகையை பெறுகின்றன. இவ்வாறு நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அடையாள முன்பணமாக கொடுத்தால் மட்டுமே ஆவணங்களின் பிரதிகள் கிடைக்கும்.
இவ்வாறு, முன்பணம் கொடுத்து ஆவணங்கள் வாங்கிய நிலையில் அதை முதலில், சம்பந்தப்பட்ட நபர்கள் படித்து பார்க்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மக்கள் சட்ட வல்லுனரின் ஆய்வுக்கு ஆவணங்களின் பிரதிகளை அனுப்பி விடுகின்றனர்.
குறிப்பாக, வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கும் நிலையில், வங்கிகளின் சட்டப்பிரிவு அலுவலர்களிடம் ஆவண பிரதிகளை ஒப்படைத்து விடுகின்றனர். இவ்வாறு, ஆவணங்கள் பெரும் நிலையில், அதில் கட்டட அனுமதி வரை பட பிரதி உள்ளதா என்று பாருங்கள்.
அதில் நீங்கள் வீடு வாங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் நிலத்தின் மொத்த பரப்பளவு என்ன, அது எத்தனை சர்வே எண்களில் அடங்கி உள்ளது என்று பாருங்கள். இதற்கு அடுத்தபடியாக, அதில் கட்டடத்தின் மொத்த பரப்பளவு என்ன ஓ.எஸ்.ஆர்.,நில ஒதுக்கீடு மற்றும் ஒப்படைப்பு விபரங்களை பார்க்க வேண்டும்.
இதில் அத்திட்டத்தில் வரும் எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறையீடு எவ்வளவு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதையும் மக்கள் விசாரித்து அறிய வேண்டும். பொதுவாக சாதாரண கட்டடங்களுக்கு நிலத்தில் அளவில் இரண்டு மடங்கு வரை எப்.எஸ்.ஐ., அனுமதிக்கப்படும்.
இது தொடர்பாக கட்டட அனுமதி வரை படத்தில் குறிப்பிடப்பட்ட விபரங்கள் என்ன என்பதை தெளிவாக அறிய வேண்டும். சில இடங்களில் அனுமதிக்கப்பட்ட எப்.எஸ்.ஐ., காட்டிலும் கூடுதல் பரப்பளவுக்கு கட்டடம் கட்டப்பட்டு இருந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து யோசிக்க வேண்டும்.
சில இடங்களில் பிரீமியம் எப்.எஸ்.ஐ., என்ற அடிப்படையில் கட்டுமான நிறுவனங்கள் கூடுதல் தள பரப்பு குறியீட்டை பயன்படுத்தி இருக்கலாம். இதற்கான செலவு என்ன, அது வீட்டின் விலையில் எந்த அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும் மக்கள் விசாரித்து அறிய வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

No comments:
Post a Comment