Monday, September 8, 2025

மேல் தளத்தில் கான்கிரீட் வேலையை துவங்கும் முன் கவனிக்க

ஒரு கட்டடத்தை கட்ட திட்டமிடும் நிலையில் அதன் ஒவ்வொரு பாகத்துக்கான பணி விபரங்கள் என்ன என்பதை முறையாக திட்டமிட வேண்டும்.  பொதுவாக வீடு கட்டும் பணியை ஒப்பந்த முறையில் பொறியாளர் அல்லது கட்டுமான ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ஒப்படைப்பது வழக்கம்.

இவ்வாறு, பணிகளை ஒப்படைத்துவிட்டால் அத்துடன் அனைத்தையும் அவர் பார்த்து கொள்வார் என்று பலரும் நினைக்கின்றனர்.  உண்மையில் கட்டுமான பணிகளை ஒப்பந்த முறையில் ஒப்படைத்தாலும், அது எவ்வாறு நடக்கிறது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக, கட்டுமான பணியில் மேல் தளம் அமைக்கும் நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை உரிமையாளர்கள் நேரில் கண்காணிக்க வேண்டும்.  நம் படிப்பு, வேலை ஆகியவற்றுக்கு சம்பந்தம் இல்லாத இந்த விஷயத்தில் எப்படி நுழைவது என்ன சொல்வது என்று பலரும் தயங்குகின்றனர்.

இதற்காக வீடு கட்டுவோர் ஒவ்வொருவரும் பொறியாளராக மாறிவிட வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியப்படாது.  கட்டடத்தில் மேல் தளத்துக்கான கான்கிரீட் போடும் பணிகள் விஷயத்தில் உரிமையாளர் எதை கவனிக்க வேண்டும் என்பதை சரியாக புரிந்து செயல்பட வேண்டும்.

இதில், வீடு கட்டுவதில் ஆரம்பத்தில் இருந்து கட்டுமான வேலை பார்த்த நபர்களுக்கு மாற்றாக மேல் தளத்துக்கு கம்பி கட்ட ஒரு குழு, கான்கிரீட் போட ஒரு குழு என்று புதிய நபர்கள் வருவர்.  இந்த நபர்கள் ஒரு சில நாட்கள் மட்டுமே உங்கள் கட்டுமான பணி இடத்துக்கு வருவர் என்பதால், இவர்களின் பணி குறித்து கண்காணிப்பது அவசியம்.

குறிப்பாக மேல் தளத்துக்கான பணிகளில் ஈடுபடுத்தப்படும் நபர்கள் ஒரு சில நாட்கள் தான் வருவர் என்பதால் அவர்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பதை கண்காணிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.  வேகமாக வந்து, அவசர கதியில் பணிகளை முடிக்கும் நிலையில் எது சரியாக நடந்துள்ளது என்பதை பார்ப்பது சிரமம் தான்.

குறிப்பாக மேல்தளம் அமைப்பதில் பலகை அடிக்கும் நிலையில் அதில் கான்கிரீட் கசியாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.  இத்துடன் கம்பி கட்டும் வேலை முடிந்த நிலையில் அதில் கொட்டப்படும் கான்கிரீட் பிதுங்கி செல்லாமல் தடுக்க என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் பாருங்கள்.

மேலோட்டமாக பார்த்தால் சின்ன விஷயமாக தெரியும் இதில் உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.  அவசரகதியில் வேலை செய்யும் நபர்களை அவர்களின் வேகத்திலேயே கண்காணித்து, பணியின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

No comments:

Post a Comment